நிம்மதியை பறித்த நிவாரணம் பால்பவுடரை குப்பையில் வீசிய பொதுமக்கள் அரசு கேவலப்படுத்துவதாக குற்றச்சாட்டு


நிம்மதியை பறித்த நிவாரணம் பால்பவுடரை குப்பையில் வீசிய பொதுமக்கள் அரசு கேவலப்படுத்துவதாக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 Dec 2018 11:00 PM GMT (Updated: 16 Dec 2018 8:34 PM GMT)

கறம்பக்குடி பகுதியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட பால் பவுடர் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அந்த பாக்கெட்டுகளை கிராம மக்கள் குப்பையில் வீசினர். மேலும் அரசு தங்களை கேவலப்படுத்துவதாக கோபத்துடன் கூறினர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கஜா புயலின் கோர தாக்குதலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாகும். வீடு, தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு என அனைத்தையும் இழந்து பொதுமக்கள் வேதனை அனுபவித்து வருகின்றனர். வாழ்வாதாரம் இழந்து எதிர்காலம் குறித்து கேள்விக்குறியோடு பரிதவிக்கும் மக்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் யானை பசிக்கு சோளப்பொறி என்ற நிலையில் இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர்.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில், வழங்கப்பட்ட நிவாரண பொருட்களில் இருந்த பால் பவுடரை சாப்பிட்ட மஞ்சுகாடு கிராம மக்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இதனால் தங்களுக்கு வழங்கப்பட்ட பால்பவுடரை சோதித்த பார்த்த போது, அதில் தயாரிப்பு தேதி இல்லாமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பால் பவுடரை தூக்கி குப்பையில் வீசினர். மேலும் நிவாரண பொருட்கள் மிகவும் தரமற்ற வகையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து கரு.கீழத்தெரு ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் நிலை தடுமாறி நிற்கும் ஏழைமக்களை அரசும், அதிகாரிகளும் கேவலப்படுத்துகின்றனர். காலாவதியான பால்பவுடர், கிழிந்த சேலைகள், உடைந்த வாளி என நிவாரண பொருட்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது. அதுவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக வழங்கப்பட வில்லை. புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், கால்நடைகள், விவசாயம் குறித்த கணக் கெடுப்பும் சரியாக நடக்கவில்லை. செல்வந்தர்களுக்கும், செல்வாக்கு மிக்கவர்களுமே நிவாரண பொருட்கள் போய் சேருகின்றன. நிம்மதியை பறித்த நிவாரண பொருட்களில் கூட ஏழை மக்களை வஞ்சித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று கூறினர்.

Next Story