மதுரை டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை: அடுத்தடுத்து சிக்கும் போலீஸ்காரர்கள், அதிர்ச்சியூட்டும் தகவல்கள்


மதுரை டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை: அடுத்தடுத்து சிக்கும் போலீஸ்காரர்கள், அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
x
தினத்தந்தி 19 Dec 2018 12:00 AM GMT (Updated: 18 Dec 2018 7:52 PM GMT)

மதுரை டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக அடுத்தடுத்து போலீஸ்காரர்கள் சிக்குவதால் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் காந்திஜி பூங்கா சாலையை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 67). டாக்டரான இவர், கடந்த 6–ந்தேதி நடைபயிற்சி சென்றிருந்தார்.

அப்போது அவரது வீட்டினுள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல், பாஸ்கரனின் மனைவி மீரா(62) மற்றும் வேலைக்கார பெண் சாந்தி, காவலாளி பொன்னவீராவி ஆகியோரை துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் 26 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கொள்ளை நடந்த வீட்டில் கிடைத்த சில தடயங்களை வைத்து மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பதுங்கி இருந்த காமராஜர்புரத்தை சேர்ந்த மாரிமுத்து(43), அசோக்நகர் ரமேஷ் (34), வலையங்குளம் எலியார்பத்தியை சேர்ந்த கணபதி(37), பெருங்குடி மீனாட்சிநகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(39) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.32 லட்சம், கார், துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் ராதாகிருஷ்ணன் போலீஸ்காரராக இருந்தவர் என்பதும், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அவர் பின்பு கொள்ளையனாக மாறியதாகவும் போலீசார் பரபரப்பு தகவலை தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மற்றொரு திருப்பமாக சென்னை கவர்னர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் குமார் மூலமாகத்தான் கொள்ளையர்களுக்கு துப்பாக்கி, தோட்டாக்கள் கிடைத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு குமார் தப்பி வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் வந்திறங்கிய குமாரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றியதாக தெரிவித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய சிலர் மதுரை விரகனூர் அருகே பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

விரகனூர் ஐராவதநல்லூரை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி சுரேஷ்குமார் (31), ராஜகுரு (27), பழனிவேல் (29), அண்ணாநகர் ஆனந்தகிருஷ்ணன் (30), வில்லாபுரம் மணிகண்டன் (38), வலையங்குளம் எலியார்பத்தி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய 6 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:–

ஒரு கொள்ளை சம்பவத்தில் 26 பேருக்கு தொடர்பு இருப்பது எங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த கும்பல் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் மட்டும்தான் தொடர்பு உடையவர்களா? அல்லது அதன் பின்னணியில் வேறு உள்ளதா? என்பதை தீர விசாரிக்க வேண்டி உள்ளது. கவர்னர் மாளிகை பாதுகாப்பில் இருந்த மத்திய படை போலீஸ்காரரும், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர் ஒருவரும் இதில் சிக்கி உள்ளனர். திருப்பூரை சேர்ந்த போலீஸ்காரர் சரவணன் என்பவருக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அவரையும் தேடிவருகிறோம்.இவர்கள்தான் இந்த சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார்களா? என்பதையும் விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே அடுத்தடுத்த திருப்பங்களாக நகர்ந்துவரும் இந்த வழக்கு குறித்த விசாரணையில் இன்னும் ஓரிரு நாளில் மர்ம முடிச்சுகள் அவிழும் என்றும், தலைமறைவாக உள்ளவர்களும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மதுரை மேலூரில் டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் ரூ.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் மேலும் 6 பேர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து மேலும் ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் டாக்டர் வீட்டில் ரூ.5 லட்சம் மட்டுமே கொள்ளை போனது. ஆனால் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story