அரியலூர், பெரம்பலூரில் மூடுபனியால் பொதுமக்கள்- வாகன ஓட்டிகள் அவதி


அரியலூர், பெரம்பலூரில் மூடுபனியால் பொதுமக்கள்- வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 18 Dec 2018 10:45 PM GMT (Updated: 18 Dec 2018 8:02 PM GMT)

அரியலூர், பெரம்பலூரில் மூடுபனியால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டனர்.

அரியலூர்,

தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருவதால் சில நாட்களுக்கு மழை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காலமான தற்போது மழை பொழியாததால் பனிப்பொழிவு அதிகம் இருக்கிறது. கார்த்திகை, மார்கழி, தை உள்ளிட்ட மாதங்களில் இந்த பனிப்பொழிவு ஏற்படும். அதிலும் மார்கழி மாதத்தில் தான் அதிக பனிப்பொழிவு, மூடுபனி காணப்படும். நேற்று முன்தினம் டெல்டா மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏதும் இல்லாமல் வானம் வறண்டு காட்சி அளித்தது. இதற்கிடையே மாலை நேரம் ஆகஆக பனிப்பொழிவு அதிகமானது தொடர்ந்து. நள்ளிரவில் கடுமையான பனி தாக்கியது. மேலும் நேற்று அதிகாலை பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றதால் பொதுமக்கள் நள்ளிரவு முதல் பெருமாள் கோவில்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர். வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

மூடுபனியால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்ல முடிந்தது. குறிப்பாக 10 அடிக்கு முன்னால் செல்லும் வாகனங்களை கூட பார்க்க முடியவில்லை. இதனால் பலவாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மெதுவாக இயக்கியதோடு, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர். பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்ணாடிகள் மூடுபனியால் மறைந்தன. அவற்றினை துடைத்துவிட்டு டிரைவர்கள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். பெரும்பாலான விவசாய நிலங்களில் மண்ணில் கால்களை பதிக்க முடியாத அளவுக்கு குளிர் அதிகமாக இருந்தது. அதிகாலையிலேயே வயலுக்கு சென்று தங்களது அன்றாட பணிகளை செய்யும் விவசாயிகள் முடங்கினர். பின்னர் சூரிய உதயம் தொடங்கிய பின்னரே வயல்வெளிகளுக்கு சென்று தாமதமாக பணிகளை தொடங்கினர்.

மேலும் அதிகாலையில் காய்கறி உள்ளிட்டவற்றை சந்தைகளுக்கு அனுப்பி வரும் விவசாயிகள் பயிர்களை பறிக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். அதனையும் மீறி உரிய நேரத்தில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என நினைத்த விவசாயிகள் வாகனங்களில் பொருட்களை எடுத்து செல்வதில் கடும் பிரச்சினைகளை சந்தித்தனர். இந்த மூடுபனி காரணமாக அரியலூர் ரெயில் நிலையத்திற்கு அதிகாலையில் வந்து சேரும் ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக வந்து சென்றன. பனியின் காரணமாக தண்டவாளத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல் ரெயில் என்ஜின் டிரைவர்கள் ரெயிலை மெதுவாக இயக்கினர். இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் பிரகதீஸ்வரர் கோவில் நேற்று மூடுபனியின் காரணமாக முற்றிலும் கண்களுக்கு தெரியாத நிலையில் காணப்பட்டு இருந்தது. இந்தமூடு பனியானது அரியலூர், பெரம்பலூர் பகுதியில் அதிகமாக காணப்பட்டது. 

Next Story