இன்று ராப்பத்து உற்சவம் 2-வது நாள் மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் புறப்படுகிறார்


இன்று ராப்பத்து உற்சவம் 2-வது நாள் மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் புறப்படுகிறார்
x
தினத்தந்தி 18 Dec 2018 10:45 PM GMT (Updated: 18 Dec 2018 8:47 PM GMT)

இன்று ராப்பத்து உற்சவத்தின் 2-வது நாளையொட்டி நம்பெருமாள் மதியம் 12 மணிக்கு புறப்படுகிறார்.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 8-ந்தேதி பகல் பத்து நிகழ்ச்சி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. பகல் பத்து நிகழ்ச்சியில் தினமும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதைத்தொடர்ந்து ராப்பத்து முதல் நாள் தொடக்கமும், சொர்க்க வாசல் திறப்பும் நேற்று நடந்தது. நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்க வாசலை கடந்து ஆயிரங்கால் மண்டபம் முன்பு மணல் வெளியில் எழுந்தருளினார். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் அதிகாலை 1.15 மணி அளவில் நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

ராப்பத்து உற்சவத்தின் 2-ம் நாள் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இன்று நண்பகல் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். மதியம் 1 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. மதியம் 2.30 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். இரவு 8 மணி வரை நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான 24-ந்தேதி (திங்கட்கிழமை) திருக்கைத்தல சேவை நடக்கிறது. அன்று மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடக்கிறது. ராப்பத்து நிகழ்ச்சியின் 8-ம் நாளான வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 5 முதல் 6 மணி வரை வையாளி வகையறா கண்டருளுகிறார்.

இரவு 7.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி இரவு 10.30 மணி வரை பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அதிகாலை 12.15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். ராப்பத்து நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதியுடன்(வியாழக்கிழமை) நிறைவடைகிறது. அன்று காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். காலை 10.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படும். 11 மணிக்கு நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் முன் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தின் திருவாய் மொழி பாசுரங்களை அரையர்கள் அபிநயத்துடன் இசைக்கிறார்கள். மூலவரை முத்தங்கி சேவையில் பக்தர்கள் தரிசிக்கலாம். நம்மாழ்வார் மோட்சம் வருகிற 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணி வரை நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா முடிவடைகிறது.

Next Story