மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதல்: பேக்கரி கடை உரிமையாளர் சாவு


மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதல்: பேக்கரி கடை உரிமையாளர் சாவு
x
தினத்தந்தி 18 Dec 2018 10:30 PM GMT (Updated: 18 Dec 2018 10:49 PM GMT)

வேடசந்தூரில், மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் பேக்கரி கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

வேடசந்தூர்,

வேடசந்தூரில், வடமதுரை ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வந்தவர் முஸ்தாக்(வயது 24). இவர் நேற்று இரவு திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூருக்கு நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (45). இவர் விட்டல்நாயக்கன்பட்டி கோட்டையூர் அருகே உள்ள தனியார் நூற்பு மில்லில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு 7.30 மணியளவில் வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

லட்சுமணம்பட்டி நால்ரோடு அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த முத்துசாமி திடீரென மொபட்டை வலதுபுறமாக திருப்பினார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த முஸ்தாக்கின் மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி, மொபட் மீது மோதியது. இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளும், மொபட்டும் கீழே விழுந்தது. இதில் தலையில் பலத்த அடிபட்ட முஸ்தாக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். முத்துசாமி பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story