பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்களில் போக்குவரத்து தொடங்கியது வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி


பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்களில் போக்குவரத்து தொடங்கியது வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 19 Dec 2018 10:45 PM GMT (Updated: 19 Dec 2018 4:55 PM GMT)

பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் மேம்பாலங்களில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக நாகர்கோவிலும், மார்த்தாண்டமும் திகழ்கிறது. எனவே இங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து ரூ.128.60 கோடி செலவில் நாகர்கோவில் பார்வதிபுரத்திலும், ரூ.179.08 கோடி செலவில் மார்த்தாண்டத்திலும் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது.

மார்த்தாண்டம் மேம்பாலம் 2,582 மீட்டர் நீளம் கொண்டது. பார்வதிபுரம் மேம்பாலம் 1,764 மீட்டர் நீளம் உடையது. தென் இந்தியாவிலேயே மிக நீளமான இரும்பு பாலமாக மார்த்தாண்டம் மேம்பாலம் கருதப்படுகிறது. இந்த 2 மேம்பாலங்களும் ஏற்கனவே பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டன.

இந்த நிலையில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் மேம்பாலங்களில் வாகன போக்குவரத்து நேற்று முதல் தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து வருகிற 25–ந் தேதி வரை மேம்பாலங்களில் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


மார்த்தாண்டம் மேம்பாலத்தில் முதலில் நெல்லை மார்க்கமாக செல்லும் அரசு பஸ்கள் சென்றன. அப்போது பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன் கலந்து கொண்டு தீபம் காட்டி வாகனங்களை வரவேற்றார். நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் மகேஷ்வரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் சஜூ, குழித்துறை நகர செயலாளர் பக்தசிங், பொதுச்செயலாளர் விஜூ ஆகியோரும் பங்கேற்றனர்.

பின்னர் பா.ஜனதா நிர்வாகிகள் ஒரு பஸ்சில் ஏறி பம்மம் வரை சென்றனர். மேலும் திரளான தொண்டர்கள் பஸ்சின் பின்னால் இருசக்கர வாகனங்களில் கோ‌ஷங்கள் எழுப்பியவாறு சென்றார்கள். மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காப்பட்டணம் செல்லும் வாகனங்கள் வெட்டுமணியில் இருந்தும், குலசேகரம் செல்லும் பஸ்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் அருகில் இருந்தும் இயக்கப்படுகின்றன.


இதே போல பார்வதிபுரம் மேம்பாலத்தில் சென்ற வாகனங்களையும் பா.ஜனதாவினர் தீபம் காட்டி வரவேற்றனர். ஆனால் பார்வதிபுரம் மேம்பாலத்தை பொறுத்த வரையில் வாகன போக்குவரத்து தொடங்கிய முதல் நாளிலேயே மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏன் எனில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வாகனங்களும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வரும் வாகனங்களும் பார்வதிபுரம் மின்வாரிய அலுவலகம் வழியாக வந்ததால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஆனால் அதே சமயத்தில் பால்பண்ணை வழியாக செல்லும் பாலத்தில் குறைவான வாகனங்களே சென்றன.

எனவே ஏற்கனவே நடைமுறையில் இருந்தது போல திருவனந்தபுரம் செல்லும் வாகனங்கள் வெட்டூர்ணிமடம் வழியாகவும், திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் பால்பண்ணை வழியாகவும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதற்கிடையே மேம்பாலங்களுக்கு கீழ் பகுதியில் சாலை அமைக்கும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என்று நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் மகேஷ்வரன் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் மேம்பாலங்களில் ஒரு வாரத்துக்கு வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது வருகிற 25–ந் தேதி வரை வாகனங்கள் செல்லலாம். அதன் பிறகு மீண்டும் பாலம் ஆய்வு செய்யப்படும். பாலத்தின் இணைப்பு பகுதிகளில் ஏதேனும் தேய்வு ஏற்படுகிறதா? தூண்கள் பலமாக இருக்கிறதா? என்றெல்லாம் ஆய்வு நடத்துவோம். பார்வதிபுரம் மேம்பாலத்தில் சிறு சிறு வேலைகள் இன்னும் செய்ய வேண்டி உள்ளது. அதாவது பாலத்தின் தொடக்கத்தில் தடுப்பு வேலி அமைப்பது, பாலத்துக்கு வண்ணம் தீட்டுவது உள்ளிட்ட பணிகள் செய்யப்பட உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் திறப்பு விழா நடத்தப்படும். திறப்பு விழா தேதியை அரசு தான் அறிவிக்கும்“ என்றார்.

Next Story