சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பம் மீது வேன் மோதியது போக்குவரத்து பாதிப்பு


சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பம் மீது வேன் மோதியது போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 Dec 2018 10:45 PM GMT (Updated: 19 Dec 2018 7:37 PM GMT)

கும்பகோணத்தில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பம் மீது வேன் மோதியது. இதனால் இரும்பு கம்பம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கும்பகோணம்,

கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட்டில் இருந்து பஸ் நிலையம், உழவர் சந்தை மற்றும் காமராஜர் சாலைக்கு செல்லும் 60 அடி சாலை முகப்பில் இரும்பு கம்பம் உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற மகாமக விழாவின் போது சிறிய வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்வதற்காக மட்டும் இந்த சாலை பயன்படும் வகையில் சாலையின் குறுக்கே இரும்பு கம்பம் அமைக்கப்பட்டது.

இதன்மூலம் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்வது தடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் அந்த வழியாக சரக்கு ஏற்றி சென்ற வேன் இரும்பு கம்பம் மீது மோதியது. இதில் கம்பத்தின் கிழக்கு பகுதியில் பிளவு ஏற்பட்டு சாய்ந்தது. இதனால் அந்த கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த சாலையின் குறுக்கே கற்களை வைத்து போக்குவரத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் மாற்று பாதை வழியாக வாகனங்களை திருப்பி அனுப்பினர். இதனால் கும்பகோணம் 60 அடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. எனவே சேத மடைந்த இரும்பு கம்பியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story