பூதப்பாண்டியில் பரிதாபம் மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு


பூதப்பாண்டியில் பரிதாபம் மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு
x
தினத்தந்தி 20 Dec 2018 11:00 PM GMT (Updated: 20 Dec 2018 3:28 PM GMT)

பூதப்பாண்டியில் மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

பூதப்பாண்டி,

கொல்லங்கோடு அருகே கிராத்தூர் அடச்சிவிளையை சேர்ந்தவர் ஞானதாஸ் (வயது 55), கொத்தனார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.

ஞானதாஸ் கடந்த சில தினங்களாக பூதப்பாண்டியில் உள்ள காந்திநகரில் ஒரு வீடு கட்டும் பணியில் ஈடுபட்டார். இதற்காக அவர் காந்திநகர் பகுதியில் தங்கியிருந்தார்.

சம்பவத்தன்று மாடியில் நின்று அவர் வேலை செய்த போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஞானதாசை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞானதாஸ் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கட்டிட பணியின் போது மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story