இழப்பீடு வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


இழப்பீடு வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 20 Dec 2018 10:45 PM GMT (Updated: 20 Dec 2018 6:41 PM GMT)

இழப்பீடு வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ராம்குமார், சீனிவாசன் தலைமையில் முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-  திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராமத்தில் இருந்து அலமேலுமங்காபுரம் வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக மத்திய அரசு அந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து விவசாய நிலம் மற்றும் வீடுகளை அப்புறப் படுத்தினார்கள். அப்போது அவர்கள் இடங்களை கொடுத்தவர்களுக்கு குறைவான இழப்பீடு வழங்கினார்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிலஎடுப்பு தொகை குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு கூடுதல் இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென வக்கீல்கள் மூலமாக மாவட்ட கலெக்டரிம் முறையிட்டு மனு அளித்தனர்.

இந்த வழக்கை விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கலாம் என கோர்ட்டில் இருந்து உத்தரவு பெறப்பட்டது. அந்த ஆணை மாவட்ட கலெக்டரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இழப்பீடு ரூ.100 கோடி வழங்கப்படாமல் உள்ளது. இதில் மனு அளித்தவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது வறுமையில் வாடுகின்றனர். சிலர் இறந்துவிட்டனர். இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் நிறைவேற்றி உரியவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி பலமுறை வக்கீல்களை அணுகியும் இதுநாள் வரையிலும் அவர்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் வழங்கப்படவில்லை. எனவே இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை அதிகாரிகளிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story