காளப்பநாயக்கன்பட்டியில் கார் மோதி மின்கம்பம் சாய்ந்தது - 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு


காளப்பநாயக்கன்பட்டியில் கார் மோதி மின்கம்பம் சாய்ந்தது - 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 Dec 2018 11:00 PM GMT (Updated: 25 Dec 2018 9:19 PM GMT)

காளப்பநாயக்கன்பட்டியில் கார் மோதியதில் மின்கம்பம் சாய்ந்தது. இதனால் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேந்தமங்கலம்,

நாமக்கல் அருகே உள்ள பட்டறைமேடு பகுதியைச் சேர்ந்த 6 பேர் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டி பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டு ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

இதில் மின்கம்பம் ரோட்டின் குறுக்கே சாய்ந்தது. இந்த விபத்தில் கார் டிரைவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இதைஅறிந்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்காக அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து பற்றி அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து ரோட்டில் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைத்தனர். இதன் காரணமாக பஸ், லாரி போன்ற வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் சுமார் 2 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு மாற்று வழியில் சென்றன. இதனால் நேற்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. இதுபற்றி சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.


Next Story