பெங்களூருவில், திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: ரூ.1 கோடி தங்கம், வெள்ளி பொருட்கள் மீட்பு - திருட்டு பொருட்களை வாங்கிய மூதாட்டி உள்பட 2 பேரும் சிக்கினர்


பெங்களூருவில், திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: ரூ.1 கோடி தங்கம், வெள்ளி பொருட்கள் மீட்பு - திருட்டு பொருட்களை வாங்கிய மூதாட்டி உள்பட 2 பேரும் சிக்கினர்
x
தினத்தந்தி 26 Dec 2018 10:15 PM GMT (Updated: 26 Dec 2018 8:45 PM GMT)

பெங்களூருவில், திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டது. திருட்டு பொருட்களை வாங்கிய மூதாட்டி உள்பட 2 பேரும் போலீசாரிடம் சிக்கினார்கள்.

பெங்களூரு,

பெங்களூருவில், திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டது. திருட்டு பொருட்களை வாங்கிய மூதாட்டி உள்பட 2 பேரும் போலீசாரிடம் சிக்கினார்கள்.

இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரு கே.பி.அக்ரஹாரா மற்றும் மாகடி ரோடு பகுதிகளில் வீடுகளின் கதவை உடைத்து திருடும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதில், ஈடுபடும் கும்பலை பிடிக்க கே.பி.அக்ரஹாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கே.பி.அக்ரஹாரா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நகரில் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜே.பி.நகரை சேர்ந்த ராஜு என்ற ஜப்பான் ராஜு(வயது 40), நாகராஜ்(24), மல்லேசுவரத்தை சேர்ந்த கிரண்குமார்(26) ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் 3 பேரும் நகரில் காலை மற்றும் மதிய நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வலம் வருவார்கள்.

அப்போது பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவதுடன், அந்த வீடுகளுக்கு முன்பாக கோலம் போடப்பட்டுள்ளதா?, குப்பைகளை சுத்தம் செய்துள்ளார்களா? என்பதை கவனிப்பார்கள். கோலம் போடாமல், குப்பைகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதை வைத்து அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வெளியூருக்கு சென்றிருப்பதை 3 பேரும் உறுதி செய்து கொள்வார்கள். பின்னர் நள்ளிரவில் அந்த வீடுகளின் கதவை உடைத்து நகைகள், பணத்தை திருடுவதை 3 பேரும் தொழிலாக வைத்திருந்தனர்.

கைதான 3 பேரும் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு வீடுகளில் திருடிய 4 கிேலா எடையுள்ள தங்க நகைகள், ஒரு கிலோ 300 கிராம் வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் ஆகியவை மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 2½ லட்சம் ஆகும். கைதான 3 பேரும் தாங்கள் வீடுகளில் திருடும் நகைகளை ஜெயநகரை சேர்ந்த நீலம்மா(70), சையத் பாரூக்கிடம் விற்பனை செய்திருந்தனர். இதையடுத்து, திருட்டு நகைகளை வாங்கியதாக நீலம்மா, சையத் பாரூக் ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ராஜு, நாகராஜ், கிரண்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்திருப்பதன் மூலம் கே.பி.அக்ரஹாரா, மாகடிரோடு, விஜயநகர், கெங்கேரி, காமாட்சிபாளையா, கலாசி பாளையா உள்ளிட்ட 26 போலீ்ஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 44 திருட்டு வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. கைதானவர்கள் மீது கே.பி.அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் கூறினார்.

முன்னதாக கைதான 3 பேரிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீஸ் கமிஷனர் சுனில்குமார் பார்வையிட்டார். மேலும் அந்த நகைகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது மீட்கப்பட்ட நகைகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் போலீஸ் கமிஷனர் சுனில்குமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ரவி டி. சென்னன்னவர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story