திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டம்


திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2018 10:15 PM GMT (Updated: 27 Dec 2018 9:08 PM GMT)

திருச்சி அரசு மருத்துவமனையில் எலக்ட்ரிக்கல், பிளம்பர் உள்பட பல்வேறு பணிகளை ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிகிச்சையில் இருந்து பெறப்படும் வருமானம் மூலம் மாத ஊதியம் வழங்கப்படுகிறது.

திருச்சி,

கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இது குறித்து கேட்டபோது, மருத்துவமனை நிர்வாகம் முறையாக பதில் அளிக்காததால் நேற்று காலை திடீரென பணியை புறக்கணித்தனர். உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்.

சம்பளத்தொகையில் ஜி.எஸ்.டி. பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ரெங்கராஜன், துப்புரவு தொழிலாளர்கள் சங்க செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மருத்துவமனை இருக்கை மருத்துவ அதிகாரி(ஆர்.எம்.ஓ.) செந்தில், கண்காணிப்பாளர் (பொறுப்பு) முரளிதரன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அனைவருக்கும் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

Next Story