குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்து பெண் தற்கொலை


குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 27 Dec 2018 10:30 PM GMT (Updated: 28 Dec 2018 12:13 AM GMT)

முத்தூர் அருகே குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

முத்தூர்,

முத்தூரை அடுத்த வேலம்பாளையம் அருகே உள்ள மங்களப்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 30). இவருடைய மனைவி சங்கீதா (28). இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரோகித்குமார் (7) என்ற மகனும், வைஷ்ணவி (4) என்ற மகளும் உள்ளனர். செல்வக்குமார் தற்போது குடும்பத்துடன் காங்கேயம் அருகே ஊதியூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கணவன்-மனைவி இருவருக்கும் குடும்பத் தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு கோபத்துடன் வீட்டிற்குள் சென்ற சங்கீதா, வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவருடைய உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு செல்வக்குமார் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சங்கீதாவை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா நேற்று உயிரிழந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரின் வெள்ளகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story