திருவாரூர் அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட 90 பெண்கள் உள்பட 150 பேர் மீது வழக்கு


திருவாரூர் அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட 90 பெண்கள் உள்பட 150 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Dec 2018 10:15 PM GMT (Updated: 28 Dec 2018 9:11 PM GMT)

திருவாரூர் அருகே புயல் நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 90 பெண்கள் உள்பட 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்,

கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்கக்கோரி பல்வேறு இடங்களில் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள உமாமகேஸ்வரபுரம், ஈஞ்சல், கீழத்துறைக்குடி உள்பட 5 கிராமங்களில் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி மாவூர் கடைவீதியில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட கீழத்துறைக்குடியை சேர்ந்த உலகநாதன் (வயது 67), ராஜேந்திரன் (60), ஜெகநாதன் (65), மகாலிங்கம் (55), சிவசாமி (50) மற்றும் 90 பெண்கள் உள்பட 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story