சேதராப்பட்டில் காங்கிரஸ் கட்சி கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் சாலைமறியல்


சேதராப்பட்டில் காங்கிரஸ் கட்சி கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 29 Dec 2018 12:15 AM GMT (Updated: 29 Dec 2018 12:15 AM GMT)

சேதராப்பட்டில் காங்கிரஸ் கட்சி கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

காலாப்பட்டு,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 134-வது ஆண்டு உதய தின விழா புதுச்சேரி மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேதராப்பட்டு செங்கழுநீரம்மன் கோவில் எதிரே காங்கிரஸ் கட்சியினர் கொடி கம்பம் அமைத்து, கொடி ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்தனர்.

ஆனால் அந்த பகுதியில் பேனர் மற்றும் அரசியல் கட்சியினர் கொடி கம்பம் அமைக்க கிராம பஞ்சாயத்தார் தடை விதித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் கொடி கம்பம் அமைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நேற்று காலை பத்துக்கண்ணு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சேதராப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முதல்-அமைச்சர் வந்து கொடி ஏற்றிச்சென்ற சிறிது நேரத்திலேயே கம்பம் அகற்றப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். ஆனால் போலீசார் வாக்குறுதி அளித்ததுபோல், கொடி கம்பம் அகற்றப்படவில்லை.

கிராம பஞ்சாயத்தால் தடை செய்யப்பட்ட பகுதியில் காங்கிரஸ் கட்சியின் கொடிகம்பம் அமைக்கப்பட்டுள்ளதால் சேதராப்பட்டில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Next Story