அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இருதய ஆய்வுக்கூடத்தில் 50 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை - ‘டீன்’ அனிதா தகவல்


அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இருதய ஆய்வுக்கூடத்தில் 50 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை - ‘டீன்’ அனிதா தகவல்
x
தினத்தந்தி 29 Dec 2018 10:45 PM GMT (Updated: 29 Dec 2018 8:51 PM GMT)

அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இருதய ஆய்வுக்கூடத்தில் 50 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக ‘டீன்’ அனிதா கூறினார்.

திருச்சி,

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இருதய ஆய்வுக்கூடத்தில் 50 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக ‘டீன்’ அனிதா கூறினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாரடைப்பு சிகிச்சைக்காக ரூ.3 கோடியே 6 லட்சம் மதிப்பில் இருதய உள்ளுருவி(கேத்லேப்) எந்திரம் வழங்கப்பட்டது. இந்த ஆய்வுக்கூடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த ஆய்வுக்கூடம் கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி முதல் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது முசிறி நெய்வேலியை சேர்ந்த ராசையா(வயது 60), திருச்சி துவாக்குடிமலையை சேர்ந்த அருள்மேரி(68) ஆகியோருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 50 இருதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதில் 20 நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட்டி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயல்முறைக்கும் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை செலவாகும். இந்த சிகிச்சை முறைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1½ லட்சம் வரை செலவாகும். இந்த சிகிச்சை முறையை முற்றிலும் இலவசமாக தமிழக முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்து கொள்ள முடியும். தமிழக அரசு 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக்கை தடை செய்து அறிவித்துள்ளது. இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். திருச்சி மாநகரம் சுகாதார குறியீட்டில் முதல் இடத்தில் இருக்கிறது.

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் 1,238 யூனிட் ரத்தம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ரத்த கொடையாளர்களிடம் முழு விவரங்களை கேட்டுவிட்டு தான் ரத்தம் பெறுவோம். வருகிற 1-ந் தேதி முதல் அரசு மருத்துவமனை முதல் தளத்தில் வாரத்துக்கு 3 நாட்கள் இயங்கி வந்த இருதய சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு இனி வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாட்கள் மட்டுமே இயங்கும். சம்பந்தப்பட்ட டாக்டர் இருதய உள்ளுருவி ஆய்வுக்கூட பணியையும் சேர்த்து பார்க்க வேண்டி இருப்பதால் மேற்கண்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது இருதய நோய் பிரிவு பேராசிரியர் டாக்டர் பாலசுப்பிரமணியன், இருதய டாக்டர்கள் அசோக், சுரேஷ்குமார், மணிவேலன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story