அறந்தாங்கியில் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு ஜன்னல் கம்பியை வளைத்து மர்ம நபர்கள் கைவரிசை


அறந்தாங்கியில் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு ஜன்னல் கம்பியை வளைத்து மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 30 Dec 2018 12:57 AM GMT (Updated: 30 Dec 2018 12:57 AM GMT)

அறந்தாங்கியில், ஜன்னல் கம்பியை வளைத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 10 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.

அறந்தாங்கி.

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 40). இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலா. 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு எட்டியதளியில் உள்ள தாயார் வீட்டிற்கு, தனது மகள்களை அழைத்து கொண்டு கலா சென்றிருந்தார்.

பின்னர் அங்கிருந்து நேற்று காலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் உள்ள ஜன்னல் கம்பிகள் வளைந்து கிடந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கலா, உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து, அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு கலா தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் புதுக்கோட்டையில் இருந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கை ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story