கோடியக்கரையில் அதிக அளவு மீன்கள் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சி


கோடியக்கரையில் அதிக அளவு மீன்கள் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 30 Dec 2018 10:45 PM GMT (Updated: 30 Dec 2018 7:20 PM GMT)

கோடியக்கரையில் அதிக அளவு மீன்கள் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ளது கோடியக்கரை. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வந்து தங்கி மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம்(நவம்பர்) 16-ந்தேதி வீசிய கஜா புயலால் மீனவர்களின் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்தன. கஜா புயலுக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று முன்தினம் கரை திரும்பினர். அப்போது மீனவர்கள் வலையில் வாலைமீன், மயில்மீன், கணவாய், திருக்கை, வஞ்சிரம், நண்டு, இறால் உள்ளிட்டவை அதிக அளவில் கிடைத்தன.

குறிப்பாக ஏ மீன் என்று அழைக்கப்படும் மயில் மீன்கள் அதிக அளவு சிக்கின. இதில் ஒருமீன் 170 கிலோ எடை இருந்தது. அந்த ஒரு மயில் மீன் மட்டும் ரூ.17 ஆயிரத்திற்கு ஏலம் போனது. மேலும் வாவல் மீன்கள் கிலோ ரூ.750-க்கும் நீலக்கால் நண்டு ரூ.400-க்கும் இறால் வகைகள்ரூ.200 முதல் ரூ.400 வரை ஏலம் போனது. கஜா புயலுக்கு பிறகு மீண்டும் அதிக அளவில் மீன்கள் கிடைத்திருப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story