பெரம்பலூர் அருகே காதல் ஜோடி தற்கொலை


பெரம்பலூர் அருகே காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 30 Dec 2018 10:15 PM GMT (Updated: 30 Dec 2018 8:13 PM GMT)

பெரம்பலூர் அருகே காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.

குன்னம்,

பெரம்பலூரை அடுத்த குன்னம் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் அருண்குமார் (வயது 20). இவர் சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். மருவத்தூர் கிராமத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள குரும்பபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் ஷீலா(18) பெரம்பலூர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில வருடங்களாக அருண்குமாரும், ஷீலாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அருண்குமார், தனது காதலி ஷீலாவை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். அதற்காக தனது நண்பர்கள் மூலமாக ஷீலாவின் குடும்பத்தினருக்கு தூது விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருண்குமாரின் தாயும், அண்ணனும் இறந்து விட்டனர். இதனை காரணம் காட்டியும், அருண்குமார் தற்போது போதிய வசதி இல்லாமல் இருப்பதை குறிப்பிட்டும், அவருக்கு ஷீலாவை திருமணம் செய்து கொடுக்க, ஷீலாவின் பெற்றோர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த அருண்குமார், காதலி தனக்கு கிடைக்கமாட்டார் என்ற விரக்தியில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அருண் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலன் அருண்குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை அறிந்த ஷீலா அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஷீலா காதலன் அருண்குமாருடன் வாழ்க்கையில் தான் ஒன்றுசேர முடியவில்லை, இறப்பிலாவது ஒன்று சேருவோம் என்று நினைத்து தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து, உடனடியாக வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஷீலாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஷீலா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து மருவத்தூர் போலீசார் ஷீலாவின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணத்தில் இணையாத ஜோடி அருண்குமாரும், ஷீலாவும் மருத்துவமனை பிரேத கூடத்தில் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அருண்குமார் தந்தை அருணாசலம் மற்றும் ஷீலாவின் தந்தை பெரியசாமி தனித்தனியாக மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். காதலன் இறந்த அடுத்த சில மணி நேரத்திலேயே காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மருவத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story