திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் அ.தி.மு.க.வினர் மோதல்


திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் அ.தி.மு.க.வினர் மோதல்
x
தினத்தந்தி 30 Dec 2018 10:56 PM GMT (Updated: 30 Dec 2018 10:56 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் அ.தி.மு.க.வினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செம்பட்டு,

திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இல்ல காதணி விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக அ.தி.மு.க. பிரமுகர்கள் விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் கையில் சால்வையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் விமான நிலையத்தின் உள் பகுதிக்குள் சென்று வரவேற்கும் வகையில் அனுமதி சீட்டு பெற்று இருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன் அவர்கள் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுக்கும் அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

உடனே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வருகை பகுதியில் உள்ள பாதையை அடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்த அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் குமார் எம்.பி, புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி ஆகியோர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை சமாதானம் செய்து அ.தி.மு.க. பிரமுகர்களை உள்ளே அழைத்து சென்றனர். அதன் பின்னரே பரபரப்பு அடங்கியது. 

Next Story