காங்கேயம் அருகே பரபரப்பு,போலீஸ்காரர் மீது தாக்குதல்; 3 பேர் கைது


காங்கேயம் அருகே பரபரப்பு,போலீஸ்காரர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2018 12:27 AM GMT (Updated: 31 Dec 2018 12:27 AM GMT)

காங்கேயம் அருகே போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கேயம், 

காங்கேயம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த 2-ம் நிலைக்காவலர் மோகன்ராஜ் (வயது 29) மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கார்த்திக்(35) ஆகிய இருவரும் காங்கேயம்-திருப்பூர் சாலையில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காங்கேயத்தில் இருந்து சிவன்மலையை நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் தாறுமாறாக வந்து கொண்டு இருந்தனர். இதனால் சந்தேகத்தின் பேரில் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி போலீஸ்காரரிடம் பதில் அளித்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் மற்ற 2 பேரும் திடீரென மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து போலீஸ்காரர் மோகன்ராஜ் தனது மோட்டார் சைக்கிளில் அவர்களை துரத்தி சென்றார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று சிவன்மலையில் ஒரு தனியார் பள்ளி அருகே அந்த வாலிபர்களை மடக்கினார். அப்போது அவர்களில் ஒருவன் தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து போலீஸ்காரர் மோகன்ராஜை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

அப்போது போலீஸ்காரர் ஒருவரை 2 வாலிபர்கள் சுற்றி நின்று கொண்டு தாக்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்ததும் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து ஓட முயன்றனர். உடனே அவர்கள் 2 பேரையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் அவர்கள் 2 பேரையும் ஒப்படைத்தனர். ஏற்கனவே ஊர்க்காவல்படை வீரர் கார்த்திக், இவர்களுடன் வந்த வாலிபரை பிடித்து வைத்து கொண்டு போலீசாரிடம் ஒப்படைத்து விட்டார். இந்த நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்த மோகன்ராஜ் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிடிபட்ட 3 பேரின் விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்(28), ராஜா (21), சக்திவேல் (19). இவர்கள் 3 பேரும் காங்கேயத்தை அடுத்த படியூரில் தங்கி, காங்கேயத்தில் உள்ள ஒரு கட்டிட மேஸ்திரியிடம் வேலை பார்த்து வந்தது தெரியவந்ததது. நேற்று சம்பளத்தை வாங்கி கொண்டு மது குடித்து விட்டு படியூர் செல்லும் போது போலீஸ்காரரை தாக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story