கொடிக்கம்பத்தை அகற்ற அதிகாரி உத்தரவு: செந்துறை அருகே பா.ம.க.வினர் சாலை மறியல்


கொடிக்கம்பத்தை அகற்ற அதிகாரி உத்தரவு: செந்துறை அருகே பா.ம.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 31 Dec 2018 10:15 PM GMT (Updated: 31 Dec 2018 7:24 PM GMT)

கொடிக்கம்பத்தை அகற்ற அதிகாரி உத்தரவு: செந்துறை அருகே பா.ம.க.வினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் பலகை மற்றும் கட்சியின் கொடிக்கம்பம் நட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்பரப்பி கிராம நிர்வாக அதிகாரி தேன்மொழி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதி பெயர் பலகை மற்றும் கொடிக்கம்பத்தை அகற்ற பொன்பரப்பி வருவாய் அதிகாரி கஸ்தூரியிடம் புகார் அளித்தார். அதன்பேரில், கொடிக்கம்பம் மற்றும் பெயர் பலகையை அகற்ற கஸ்தூரி உத்தரவிட்டார். இதனை கண்டித்து பா.ம.க.வினர் நேற்று மாலை பொன்பரப்பி பஸ் நிறுத்தம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மறியலை கைவிடாமல் கட்சியினர் தொடர்ந்தனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் மோகன் மறியல் செய்யும்படி உங்களை ஒருவர் தூண்டி விட்டு தலைமறைவாகிவிட்டார் என்று கூறினார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாசு, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கட்சியின் பெயர் பலகை மற்றும் கட்சி கொடிக்கம்பத்தை பஞ்சாயத்து அலுவலகம் அருகே வைத்துக்கொள்ளுமாறு அவர்களிடம் கேட்டு கொண்டார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு கட்சியினர் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story