கரூரில் பொதுமக்களுக்கு பேப்பர் பை வினியோகித்து இளைஞர்கள் விழிப்புணர்வு


கரூரில் பொதுமக்களுக்கு பேப்பர் பை வினியோகித்து இளைஞர்கள் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 31 Dec 2018 10:45 PM GMT (Updated: 31 Dec 2018 8:20 PM GMT)

கரூரில் பொதுமக்களுக்கு பேப்பர் பை வினியோகம் செய்து இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கரூர்,

தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூரில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் பிளாஸ்டிக் பயன்பாடு கைவிடப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து ஓட்டல்கள் உள்ளிட்டவற்றிலும் வாழைஇலை, பாக்குமரத்தட்டுகள் பயன்பாட்டிற்கு வந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் இன்று (செவ்வாய்கிழமை) 2019 புத்தாண்டு தினத்தையொட்டி பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது. இதையொட்டி கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு கருவூர் நண்பர்கள் குழுவை சேர்ந்த இளைஞர்கள் நேற்று, பொதுமக்களுக்கு பேப்பரால் தயாரிக்கப்பட்ட மக்கும் தன்மையுடைய பையினை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அந்த வழியாக புத்தாண்டையொட்டி கேக், பட்டாசு, தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை பாலித்தீன்பையில் போட்டு வாங்கி வந்தவர்களை தடுத்து நிறுத்தி, பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த பேப்பர் பையினுள் அந்த பொருட்களை போட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

உற்பத்தியை தடுக்க முடியாதா?

மேலும் விவசாயத்திற்கும், சுற்றுசூழலுக்கும் மிகப்பெரிய எதிரியாக பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளன. அரசு சட்டத்தின் மூலம் மட்டும் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அதனை ஒழிக்க முடியும். நாம் கட்டிய வீட்டை அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு பத்திரமாக விட்டு செல்கிறோம். அதே போல் பூமியையும் மாசில்லாமல் விட்டு செல்ல வேண்டும் என அங்கு நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கருவூர் நண்பர்கள் குழுவினர் பேசினர். மேலும் ஒத்தை ரூபாய் பொருளுக்கும் பிளாஸ்டிக் கவரா? நம் கண்முன்னே பூமி அழியுது ஜோரா... என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசக அட்டைகளை கையில் பிடித்தபடியே கோஷம் எழுப்பினர்.

பின்னர் கரூர் பஸ் நிலையம், மனோகரா கார்னர் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பேப்பர் பை, துணிப்பையை பொதுமக்களுக்கு வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பிளாஸ்டிக் பை தயாரிக்கும் கம்பெனிகளை மூட முடியாதா? என சிலர் அந்த இளைஞர்களிடம் கேள்வி எழுப்பினர். நாம் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தாலே அதன் உற்பத்தியை நிறுத்தி விடுவார்கள் என பதில் அளித்தனர். 

Next Story