கஜா புயலால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம் கிராமமக்கள் வலியுறுத்தல்


கஜா புயலால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம் கிராமமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Dec 2018 11:00 PM GMT (Updated: 31 Dec 2018 10:22 PM GMT)

கஜா புயலால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கிராமமக்கள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,


தஞ்சையை அடுத்த விளார் கிராமத்தை சேர்ந்த 30–க்கும் மேற்பட்டோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், கஜா புயலால் எங்கள் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் பாதித்த பின் 10 நாட்கள் வரை குடிநீர், உணவு இன்றி தவித்தோம். குடிசை வீடுகள் சேதம் அடைந்தன. வாழை மரங்கள் சாய்ந்தன, ஆடுகள் இறந்தன. ஆனால் இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்ல எங்கள் ஊர் பாதிக்கப்படவில்லை என பொய்யான தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அறிகிறோம். எங்களை யாரும் சந்தித்து கருத்து கேட்கவில்லை. பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வும் செய்யவில்லை. எனவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

மகாத்மாகாந்தி வேலையளிப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் வழங்கிய விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ரூ.100, ரூ.120 என வரைமுறையின்றி ஊதியம் வழங்கப்படுகிறது. படிப்பறிவு இல்லாத மக்களை ஏமாற்றி பல முறைகேடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர். எனவே அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலிதென்பாதி செட்டிக்கொல்லை பகுதியை சேர்ந்த 20–க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் கஜா புயலால் பாதித்த 45 குடும்பத்தினருக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இவர்கள் அனைவரும் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரிந்தும் அதிகாரிகள் வேண்டுமென்றே நிவாரணம் வழங்காமல் புறக்கணித்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.


தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே வளசகாடு கிராமத்தை சேர்ந்த 40–க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் நிலமோ, அசையா சொத்துகளோ இல்லை. கூரை வீடுகளில் தான் வசித்து வந்தோம். கஜா புயலில் அந்த கூரை வீடுகளும் பாதிக்கப்பட்டன. பகல்நேரத்தில் ஆற்றங்கரை பகுதியில் எங்கள் கூரை வீடுகள் இருந்த இடத்திற்கு சென்று சமைத்து சாப்பிடுகிறோம். இரவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தூங்குகிறோம். இந்தநிலையில் நாங்கள் குடியிருக்கும் இடம் ஆற்றங்கரை பகுதி என்பதாலும், வனத்துறையினர் தேக்குமரங்கள் வைத்துள்ளதாலும் மத்திய, மாநில அரசுகளின் உதவி மூலம் கான்கிரீட் வீடுகள் கட்ட முடியவில்லை. பலமுறை வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. உடனே எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கி, கான்கிரீட் வீடு கட்ட உரிய நிதிஉதவி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி திடீரென கிராமமக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story