உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெறும் கலைப்போட்டிகள் நடத்த விரும்பும் பள்ளிகள் பதிவு செய்யலாம்; கலெக்டர் அறிவிப்பு


உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெறும் கலைப்போட்டிகள் நடத்த விரும்பும் பள்ளிகள் பதிவு செய்யலாம்; கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Jan 2019 10:45 PM GMT (Updated: 1 Jan 2019 6:42 PM GMT)

உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெறும் கலைப்போட்டிகள் நடத்த விரும்பும் பள்ளிகள் பதிவு செய்யலாம் என கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) சார்பில், மகாத்மா காந்தியின் 150–வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கிடும் வகையில், ஆரோக்கிய பாரத பயணம் எனும் தொடர் சைக்கிள் பயணம் தேசிய அளவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக சரியாக உணவு உண்ணும் இயக்கத்தின் படி பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் வகையில், போஸ்டர் போட்டிகள், சுவர் வண்ண போட்டிகள் மற்றும் மின்னணு கலைப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக இந்த போட்டிகளை பள்ளி அளவில் நடத்த விரும்பும் பள்ளிகள் அனைத்தும் https://fssai.gov.in /creativitychallenge என்ற தளத்தில் பதிவு செய்தல் வேண்டும். அந்த போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் அந்தந்த பள்ளி அல்லது கல்லூரிகள் மூலம் snfatschool@fssai.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தங்களின் பெயரினை பதிவு செய்ய வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ–மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும்.

அப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் போஸ்டர்கள் தேசிய அளவிலான தேர்வுக்கு அனுப்பப்படும். எனவே ஆரோக்கியமான இந்தியாவினை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் மேற்கொண்ட போட்டி நிகழ்ச்சிகளில் மாணவ–மாணவிகள் தங்கள் பள்ளிகளின் மூலம் தங்களது பள்ளியின் பெயரினை பதிவு செய்து கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மின்னணு கலைப்போட்டிக்கு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவ–மாணவிகளும் கலந்துகொள்ளலாம். இது தொடர்பான தகவல்கள் முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவரங்கள் தெரிவிக்கப்படும்.

இந்த போட்டிகளில் பங்கு பெறுவதன் மூலம் மாணவ–மாணவிகளின் திறன் மேம்படும். உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்பட்டு மாணவ–மாணவிகள் ஆரோக்கியம் மேம்படுவதுடன், தங்களது குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கும் உதவியாக இருக்கும். எனவே இந்த போட்டிகளில் கலந்துகொள்ள மாணவ–மாணவிகள் பங்கேற்க ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ–மாணவிகளை உற்சாகப்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதரவு தர வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். மேலும், 0421–2971190 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story