கடை, கடையாக அதிரடி சோதனை: பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் களமிறங்கிய அதிகாரிகள், 10¾ டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்


கடை, கடையாக அதிரடி சோதனை: பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் களமிறங்கிய அதிகாரிகள், 10¾ டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:45 PM GMT (Updated: 2 Jan 2019 7:22 PM GMT)

பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் அதிகாரிகள் களமிறங்கி உள்ளனர். கடை, கடையாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10¾ டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகிவிட்ட பிளாஸ்டிக் பைகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட் களுக்கு ஜனவரி 1-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது சுகாதார கேடு என்று நினைக்காவிட்டாலும், ‘பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படுமோ...’, என்ற எண்ணத்துக்கு பொதுமக்கள் வந்துவிட்டனர்.

இதனால் தெருவெங்கும் உள்ள குப்பை தொட்டிகளிலும், மாநகராட்சி அறிவித்து தனி கிடங்குகளிலும் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதேவேளை பிளாஸ்டிக் பயன்படுத்தாவிட்டால் தான் என்ன? என்ற மனநிலைக்கும் மக்கள் வர தொடங்கிவிட்டனர்.

பிளாஸ்டிக் தடை 1-ந் தேதி தொடங்கிவிட்டாலும், புத்தாண்டு தினத்தில் ஏன் புயலை கிளப்ப வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் அமைதியாய் இருந்துவிட்டது. இந்தநிலையில் நேற்று பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை அதிகாரிகள் நேற்று காலை 8 மணி முதல் தொடங்கினர்.

அண்ணாநகர் மண்டலத்தில் மத்திய வட்டார மேற்பார்வை பொறியாளர் எம்.முருகன் தலைமையில் மாநகராட்சி மண்டல அதிகாரி ஆ.பரந்தாமன், பொறியாளர்கள் கே.சுந்தரராஜன், செந்தில்குமார், கலையரசன் உள்பட அதிகாரிகள் உணவகங்கள், ஜவுளி-மளிகை கடைகள் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.

இதில் அரசால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தள்ளுவண்டிகள் மூலம் அப்பொருட்களை உடனடியாக அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

சென்னையின் முக்கிய வியாபார தலமான தியாகராயநகரிலும் நேற்று அதிகாரிகள் சோதனை நடந்தது. உதவி செயற்பொறியாளர் கே.சுரேஷ்பாபு தலைமையில் அபித், சீனிவாசன் உள்பட அதிகாரிகள் தியாகராயநகர் முழுவதும் வீதி வீதியாக சோதனை நடத்தினர். அப்போது ஜவுளி கடைகள், உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதேபோல அந்தந்த மண்டலங்கள் சார்பிலும் நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டன. அம்பத்தூரில் மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், மண்டல அதிகாரி ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை கையாளப்பட்டது.

தள்ளுவண்டிகள் மூலம் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் உடனுக்குடன் கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதவிர ‘பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்க வேண்டாம்’ என்று தெருவெங்கும் மாநகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலும் நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும (அங்காடி நிர்வாக குழு) முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் சோதனை நடத்தினர். பூ, காய்கறி மற்றும் பழ சந்தைகளில் ஏராளமான கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட் களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உலர் தானியங்கள் விற்பனை மையத்திலும் சோதனை நடந்தது.

ஆனால், மாநகராட்சியிடம் ஒப்படைக்க வைத்திருந்த பிளாஸ்டிக் கழிவுகளை வலுக் கட்டாயமாக எங்களிடம் இருந்து பிடுங்கி அகற்றுகிறார்கள் என்று கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சிலர் குற்றம் சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டை முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.ராஜேந்திரன் மறுத்தார். ‘பாகுபாடு இல்லாமலும், அரசின் உத்தரவுக்கு துணை நிற்கவும் தான் இந்த சோதனை. கைப்பற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் உடனடியாக மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படும். முறையாக முன் அறிவிப்பு கொடுத்த பிறகே சோதனையும், நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் 2 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன’ என்று அவர் விளக்கம் அளித்தார்.

அதிகாரிகள் நடவடிக்கையும், வியாபாரிகளின் குற்றச்சாட்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதவிர நகர் முழுவதும் நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை தீவிரமாக்கப்பட்டது.

அந்தவகையில் சென்னையில் நேற்று வரை 10¾ டன் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஆவடி நகராட்சி கமிஷனர் ஜோதிகுமார் உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் தலைமையில் ஆய்வாளர்கள் பிரகாஷ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆவடி பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Next Story