புளியங்குடியில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது 32 பவுன் நகை மீட்பு


புளியங்குடியில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது 32 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 4 Jan 2019 9:30 PM GMT (Updated: 4 Jan 2019 7:04 PM GMT)

புளியங்குடியில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புளியங்குடி, 

புளியங்குடியில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 32 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்

புளியங்குடி டி.என்.புதுக்குடி பிச்சாண்டி கீழத்தெருவை சேர்ந்தவர் சங்கிலியாண்டி (வயது 65) ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவருடைய மனைவி நாகம்மாள் (60). சம்பவத்தன்று இவர்களது வீட்டில் புகுந்த மர்ம நபர் பீரோவுக்கு அடியில் உணவு வைக்கும் ஹாட்பாக்சில் வைத்திருந்த 27 பவுன் நகையை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீசார் அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் சாமி என்ற விஜயகுமாரை (28) பிடித்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அவர் சங்கிலியாண்டி வீட்டில் இருந்து 27 பவுன் நகையை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஜயகுமாரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மேல் விசாரணை நடத்தினர்.

மேலும் 3 வீட்டில் திருட்டு

அப்போது போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரித்தனர்.

அவர் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. அதில் கடந்த ஆகஸ்டு மாதம் மணிகண்டனின் தம்பி வீட்டில் 11 பவுன் நகை, நவம்பர் மாதம் வேல்சாமி என்பவர் வீட்டில் 12 கிராம் தங்க செயின் மற்றும் அக்டோபர் மாதம் சிவராம தெருவை சேர்ந்த டேனியல் ராஜா என்பவர் வீட்டில் புகுந்து ரூ.13 ஆயிரத்தையும் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், விஜயகுமாரிடம் இருந்து 32 பவுன் நகையை மீட்டார். பின்னர் போலீசார் அவரை சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story