சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகம்


சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகம்
x
தினத்தந்தி 5 Jan 2019 10:30 PM GMT (Updated: 5 Jan 2019 4:26 PM GMT)

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சுசீந்திரம்,


குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்ரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சுசீந்திரம் கோவிலில் நேற்று கொண்டாடப்பட்டது.


இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகம் நடந்தது. காலை 8 மணிக்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், களபம், சந்தனம், குங்குமம், எலுமிச்சை சாறு, பஞ்சாமிர்தம், மாதுளை சாறு, தேன் உள்பட 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடச அபிஷேகம் நடந்தது.

இந்த அபிஷேகத்தை காண அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அபிஷேகத்தை காண கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மதியம் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. முன்னதாக பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம் ஆகியவை வழங்கப்பட்டது.

லட்டு வழங்கும் நிகழ்ச்சியை குமரி மாவட்ட கோவில் இணை ஆணையர் அன்புமணி தொடங்கி வைத்தார். மேலும், கோவில் கலையரங்கம், எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் காலை 10.30 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட தலைமை நீதிபதி கருப்பையா, குடும்ப நல நீதிபதி கோமதி நாயகம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அசோகன், நகர செயலாளர் சந்துரு, சுவாமி பத்மேந்திரா உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


மாலையில் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பஜனை, ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகம், ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் பிச்சி, மல்லிகை, ரோஜா, தாமரை, பச்சை, கனகாம்பரம், முல்லை, கொழுந்து, மருக்கொழுந்து உள்ளிட்ட மலர்களால் புஷ்பாபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story