சென்னை ஆர்.கே.நகர் போல் திருவாரூர் இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க. வெற்றி பெற்று சாதனை படைக்கும் டி.டி.வி. தினகரன் பேட்டி


சென்னை ஆர்.கே.நகர் போல் திருவாரூர் இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க. வெற்றி பெற்று சாதனை படைக்கும் டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 6 Jan 2019 11:15 PM GMT (Updated: 6 Jan 2019 5:10 PM GMT)

சென்னை ஆர்.கே. நகர் போல், திருவாரூர் இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று புதிய சாதனை படைக்கும் என கும்பகோணத்தில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

கும்பகோணம்,


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தேர்தலை கண்டு நான் பயப்படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். நான் பல வழக்குகளை பார்த்தபிறகு தான் சென்னை ஆர்.கே. நகரில் நின்று வெற்றி பெற்றேன். நாங்கள் தேர்தலை கண்டு பயப்பட மாட்டோம். என்னை சொத்து குவிப்பு தினகரன் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலினை சென்னையில் டெபாசிட் இழந்த கட்சியின் தலைவர் என்று அழைக்கிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் போல் வந்து வேகமாக சென்றதால் கஜா ஸ்டாலின் என்று கேலியாக அழைக்கிறார்கள். தேர்தலை கண்டு தி.மு.க. தலைவர் ஏன் பயப்படுகிறார் என்று தெரியவில்லை. நான் பெங்களூருக்கு எனது சித்தி சசிகலாவை பார்க்க சென்றேன். அதை பற்றி கருத்து கூறிய ஸ்டாலின் நான் நேர்த்திக்கடன் செய்ய சென்றதாக கூறினார்.


ஆனால் டெல்லி திகார் ஜெயிலில் கனிமொழி இருந்தபோது ஸ்டாலின் பார்க்க போனாரே? அதற்கு என்னவிதமான நேர்த்திக்கடன் என்று தெரியவில்லை. 6 மாதத்திற்கு ஒரு முறை லண்டன் செல்கிறாரே? அது என்ன கடன்? என்னை பற்றி கேள்வி கேட்டால் இவருக்கு எல்லாம் நான் பதில் கூற முடியாது என்று கூறியவர் தான் ஸ்டாலின். அன்று அப்படி சொன்னவர் இன்று எனக்கு பதில் கருத்து சொல்லி வருகிறார்.

நிவாரணத்தை காரணமாக காட்டி தேர்தல் தள்ளிப்போகும் என்று சொல்கிறார்கள். அது என்னவென்று இன்று (திங்கட்கிழமை) தெரிந்து விடும். திருவாரூரில் தி.மு.க. வைத்துள்ள ஓட்டு தற்போது இழந்த நிலையில் உள்ளது. சென்னை ஆர்.கே. நகர் தேர்தலில் 41 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றேன். என்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தார்கள். அதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திருவாரூரில் வெற்றி பெற்று புதிய சாதனை படைப்போம். எங்கள் சாதனையை நாங்களே முறியடிப்போம். திருவாரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோட்டை என்று நிரூபிப்போம்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.

பேட்டியின்போது மாநில பொருளாளர் எம்.ரெங்கசாமி, மாநில அமைப்பு செயலாளர் எம்.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story