என்ஜினீயரிங் மாணவர் கழுத்தை அறுத்து கொலை: காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்து கட்டியது அம்பலம்


என்ஜினீயரிங் மாணவர் கழுத்தை அறுத்து கொலை: காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்து கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 6 Jan 2019 11:30 PM GMT (Updated: 6 Jan 2019 5:34 PM GMT)

என்ஜினீயரிங் மாணவரை, காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவிடைமருதூர்,


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்தவர் சாகுல்அமீது. இவருடைய மகன் மும்தசர்(வயது20). இவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வந்தார்.

சாகுல்அமீது துபாய் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாய் மும்தாஜ் பேகத்துடன் மும்தசர், ஆவணியாபுரத்தில் வசித்து வந்தார். கடந்த 4–ந் தேதி இரவு மும்தசர், திருமங்கலக்குடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்றார்.


அங்கிருந்து தனது தாய் மும்தாஜ் பேகத்தை செல்போனில் தொடர்பு கொண்ட மும்தசர், நண்பனின் பிறந்த நாள் விழாவுக்கு செல்வதற்காக கூறி விட்டு சென்றார். அதன் பிறகு வீட்டுக்கு திரும்பவரவில்லை. இந்த நிலையில் மும்தசரின் செல்போனில் இருந்து மும்தாஜ்பேகத்துக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர்கள், மும்தசரை கடத்தி உள்ளோம், கோயம்புத்தூர் அழைத்து செல்கிறோம், ரூ.5 லட்சம் கொடுத்தால் விடுவிப்போம் என மிரட்டினர். இதனால் பதற்றம் அடைந்த மும்தாஜ்பேகம் மற்றும் அவருடைய உறவினர்கள் திருவிடைமருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மும்தசரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் நேற்றுமுன்தினம் திருபுவனம் வீரசோழன் ஆற்றுக்கு செல்லும் வழியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மும்தசர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையின்போது, மும்தசரின் நண்பர்கள் திருபுவனம் மருத்துவர் தெருவை சேர்ந்த முகமதுரவீக் மகன் இஜாஸ்அகமது (20), பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஜியாவுதீன் மகன் ஜலாலுதீன் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் உள்பட 3 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதில் இஜாஸ்அகமது, ஐ.டி.ஐ. மாணவர் ஆவார். ஜலாலுதீனும், 17 வயது சிறுவனம் ஆட்டோ டிரைவராக உள்ளனர்.


சந்தேகத்தின்பேரில் போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மும்தசரை, அவருடைய நண்பர்களே கொலை செய்தது அம்பலமானது. இதுபற்றி தெரியவந்த விவரங்கள் குறித்து போலீசார் கூறியதாவது:–

மும்தசரும், இஜாஸ்அகமதுவும் பள்ளியில் படிக்கும்போதே நண்பர்கள். மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணை இஜாஸ்அகமது காதலித்து வந்தார். அந்த பெண்ணிடம், சமூக வலைதளம் மூலமாக மும்தசர் பழகி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இஜாஸ்அகமது தனது காதலி தனக்கு கிடைக்க மும்தசர் தடையாக இருப்பதாக கருதி, மும்தசரை கொல்ல நண்பர்ளுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழா என கூறி மும்தசரை, அவருடைய நண்பர்கள் திருபுவனத்துக்கு வர செய்தனர். அப்போது கேக் வெட்டப்போவதாக கூறி, மும்தசரின் கண்களில் ரிப்பன் கட்டி உள்ளனர்.


இதையடுத்து இறைச்சி கடையில் பயன்படுத்தப்படும் கத்தியால், மும்தசரின் கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளனர். அதன் பின்னர் மும்தசரின் செல்போன் மூலம் அவருடைய தாயாரிடம் பேசி, கடத்தல் நாடகம் ஆடி உள்ளனர். மேலும் மும்தசரின் செல்போன், கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை திருவிடைமருதூர் சன்னாபுரம் சாலையில் ஆண்டளாம்பேட்டை ரெயில்வே கேட் அருகே உள்ள முத்தூர்மோரி வாய்க்காலில் போட்டு விட்டு ஆட்டோவில் தப்பி உள்ளனர். அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து உள்ளோம். மும்தசரின் செல்போன் மற்றும் ஸ்கூட்டரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு போலீசார் கூறினர்.


இதுபற்றி திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஜெயகவுரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு இஜாஸ்அகமது (20) அவருக்கு உடந்தையாக இருந்த ஜலாலுதீன் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் துபாயில் இருந்து மும்தசரின் தந்தை சாகுல்அமீது நேற்று அதிகாலை ஆவணியாபுரத்துக்கு வந்தார். இதையடுத்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மும்தசரின் வீட்டுக்கு சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கொலை சம்பவத்தை தொடர்ந்து ஆவணியாபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் என்ஜினீயரிங் மாணவரை, நண்பர்களே சேர்ந்து கொலை செய்து உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story