9, 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


9, 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 6 Jan 2019 11:15 PM GMT (Updated: 6 Jan 2019 6:43 PM GMT)

9, 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு விரைவில் விலையில்லா மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

அடுத்த மாதம் பிளஸ்–1, பிளஸ்–2 படிக்கும் மாணவ–மாணவிகளுக்கும், பிளஸ்–2 முடித்த மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும். 9 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோபி நகராட்சியில் ரூ.52 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. கோபி அருகே கொளப்பலூரில் டெக்ஸ்டைல்ஸ் பார்க் அடுத்த மாதம் தொடங்கப்படும். இதன் மூலம் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சமூக நலத்துறையும், கல்வித்துறையும் இணைந்து 51 ஆயிரம் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Next Story