திருவள்ளூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் நகை கொள்ளை


திருவள்ளூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் நகை கொள்ளை
x
தினத்தந்தி 6 Jan 2019 10:15 PM GMT (Updated: 6 Jan 2019 6:50 PM GMT)

திருவள்ளூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் நகை, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காந்திரோட்டை சேர்ந்தவர் ரீகம் சந்த்ஜெயின் (வயது 53). திருவள்ளூர் நகர் மன்ற உறுப்பினராக 3 முறை இருந்துள்ளார். திருவள்ளூர் பகுதியில் 4 இடங்களில் நகைக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை திருவள்ளூர் பஜார் வீதி கொண்டம்மாபுரம் தெருவில் உள்ள இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினர் ரீகம் சந்த்ஜெயினுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது நகைக்கடையின் பூட்டு வெல்டிங் எந்திரம் மூலம் உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 45 பவுன் நகை, ரூ.6 லட்சம் மதிப்பிலான 80 வைர கற்கள், ரூ.6 லட்சம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ரீகம் சந்த்ஜெயின் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

இந்த நகைக்கடை அருகே 5-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள், ஏராளமான மளிகை கடைகள் உள்ளது. திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையம் அருகே இந்த கடை அமைந்துள்ளது. போலீஸ் நிலையம் அருகே ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடைக்கு காவலாளி இல்லை. அங்கிருந்த கண்காணிப்பு கேமரா சில நாட்களாக செயல்படவில்லை.

இந்த கொள்ளை குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி கூறியதாவது:-

கொள்ளையர்களை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் சற்று தொலைவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story