பதனீர் எடுக்க ஏறியபோது மாரடைப்பு பனை மரத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி


பதனீர் எடுக்க ஏறியபோது மாரடைப்பு பனை மரத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி
x
தினத்தந்தி 6 Jan 2019 11:45 PM GMT (Updated: 6 Jan 2019 11:39 PM GMT)

சாமல்பட்டி அருகே பனை மரத்தில் பதனீர் எடுப்பதற்காக தொழிலாளி ஏறிய போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதனால் அவர் மரத்தில் பிணமாக தொங்கியது பார்க்க பரிதாபமாக இருந்தது.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி அருகே உள்ளது கஞ்சனூர். இங்குள்ள நாடார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). பனை மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள பனைமரத்தில் பதனீர் எடுப்பதற்காக ஏறினார்.

பனை மரத்தின் உச்சியில் இருந்த போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் உயிர் இழந்தார். இதனால் மரத்தில் தலைகீழாக பிணமாக தொங்கினார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கணேசனின் உடலை மீட்டு கீழே கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, உடலை மீட்டனர். இதையடுத்து சாமல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து போன கணேசனுக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பனைமரத்தில் தலைகீழாக பிணமாக தொழிலாளி தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story