காஞ்சீபுரத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது


காஞ்சீபுரத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2019 10:45 PM GMT (Updated: 7 Jan 2019 5:05 PM GMT)

காஞ்சீபுரத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் பழைய ரெயில் நிலையம், அண்ணா பூங்கா உள்ளிட்ட நகரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 35), அதே பகுதியைச் சேர்ந்த கொக்கு பழனி (44), கைலாசநாதர் கோவில் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் விஜயா (50), அதே பகுதியைச் சேர்ந்த கல்பனா (30) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story