பணிச்சுமை காரணமாக வாலிபர் இறந்ததாக கூறி ரே‌ஷன் கடை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்


பணிச்சுமை காரணமாக வாலிபர் இறந்ததாக கூறி ரே‌ஷன் கடை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2019 11:00 PM GMT (Updated: 7 Jan 2019 10:03 PM GMT)

பணிச்சுமை காரணமாக வாலிபர் இறந்ததாக கூறி ரே‌ஷன் கடை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொங்கல் பரிசை வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சிராமாச்சிபாளையம் பகுதியை சேர்ந்தகுமரேசன் மாணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு சங்கத்துக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை அழைத்து வருவதற்காக அம்மாபேட்டை அருகே உள்ள சித்தாருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் சித்தாரில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ரோட்டை கடந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு லாரி ஒன்று குமரேசன் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினார்கள்.

விபத்தில் குமரேசன் இறந்த தகவல் கிடைத்ததும் கூட்டுறவு சங்கம் மற்றும் ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் அந்த பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அம்மாபேட்டை, அந்தியூர், பவானி ஆகிய வட்டாரங்களில் உள்ள ரே‌ஷன் கடைகளும் அடைக்கப்பட்டது. இதனால் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ரே‌ஷன் கார்டுகளுடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இதுகுறித்து ரே‌ஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், மாணிகம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக பணியாற்றி வரும் குமரேசன் பணிச்சுமையின் காரணமாக தான் விபத்தில் இறந்து உள்ளார். அதனால் குமரேசனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, ரே‌ஷன் கடை மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர்.


Next Story