புதுக்கடை அருகே காரில் கடத்திய 700 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது


புதுக்கடை அருகே காரில் கடத்திய 700 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2019 11:00 PM GMT (Updated: 8 Jan 2019 2:53 PM GMT)

புதுக்கடை அருகே கேரளாவுக்கு காரில் கடத்திய 700 கிலோ ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

களியக்காவிளை,

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், பெலிக்ஸ் ஆகியோர் புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, புதுக்கடையில் இருந்து தேங்காப்பட்டணம் கடற்கரை சாலையை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. இதைகண்ட போலீசார் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் சிறு, சிறு மூடைகளாக 700 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது.

மேலும், காரில் இருந்த கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த அபிலாஷ் (வயது 31), பிபின் (27) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அபிலாஷ், பிபின் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், ரே‌ஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியிலும், கடத்தலுக்கு    பயன்  படுத்திய காரை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

Next Story