செய்யூர் அருகே மீனவர் வெட்டிக்கொலை 6 பேர் கைது


செய்யூர் அருகே மீனவர் வெட்டிக்கொலை 6 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2019 11:15 PM GMT (Updated: 8 Jan 2019 7:17 PM GMT)

செய்யூர் அருகே மீனவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த கடப்பாக்கம் குப்பம், ஊத்துக்காட்டு அம்மன் குப்பம் பகுதி மீனவர்கள் இடையே கடந்த 1.9.2017 அன்று மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. இதில் கடப்பாக்கம் குப்பம் பகுதியை சேர்ந்த சேகர், ராமகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டனர். அதன் பிறகு நடந்த வன்முறையில் படகுகள், வீடுகள் வாகனங்கள் எரிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். போலீசாரும், வருவாய்துறையினரும் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சுமுக தீர்வு ஏற்பட்டது.

இது தொடர்பான முன்விரோதத்தில் நேற்று முன்தினம் இரவு ஊத்துகாட்டு அம்மன் குப்பத்தை சேர்ந்த மீனவர் தேசிங்கு (வயது 36) மீன்மார்க்கெட் அருகில் சென்ற போது அவரை வழி மறித்த மர்ம நபர்கள் அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். இதில் தேசிங்கு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அங்கு பதற்றம் நிலவியதால் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மேற்பார்வையில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு கடைகள், பள்ளிகள் அடைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து நேற்று காலை தேசிங்கின் உறவினர்கள் மற்றும் ஊத்துக்காட்டு அம்மன் குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் திடீரென 100-க்கும் மேற்பட்டோர் கடப்பாக்கம் சாலையில் அமர்ந்து குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் ஆர்.டி.ஓ. மாலதி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இந்தநிலையில் கடப்பாக்கம் குப்பத்தை சேர்ந்த குமரன் (19), கோதண்டம் (22), ரஞ்சித் (22), விக்னேஷ் (24), காமேஷ் (20), 18 வயதான ஒருவர் என 6 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட தேசிங்குக்கு மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

Next Story