திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விஷம் தின்ற போலீஸ்காரர் சாவு காதலிக்கு தீவிர சிகிச்சை


திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விஷம் தின்ற போலீஸ்காரர் சாவு காதலிக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 8 Jan 2019 11:15 PM GMT (Updated: 8 Jan 2019 7:41 PM GMT)

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விஷம் தின்ற போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே விஷம் குடித்த அவரது காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவெறும்பூர்,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி வடக்கு மலையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஜெயதேவன் (வயது 30). இவர் நவல்பட்டு அருகே அண்ணாநகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இதேபோல் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் செண்பகம் (27). இவர் திருவெறும்பூர் காவல்நிலைய குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது சொந்்த ஊர் சேலம் ஆகும். இதற்கிடையில் கடந்த 2016-ம் ஆண்டு ராமேசுவரத்துக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த போது, ஜெயதேவனுக்கும், செண்பகத்துக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.

இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதனையடுத்து இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயதார்த்த விழாவும் நடைபெற்றது. இந்நிலையில் ஜெயதேவன் வயிற்றுப்புண் மற்றும் குடல்வால்வு நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 28-ந்தேதி குடல்வால்வு நோய் காரணமாக ஜெயதேவனுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் விடுப்பு எடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, தாங்கமுடியாத வலி ஏற்பட்டதால் எலி மருந்து (விஷம்) தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையில் ஜெயதேவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தனது காதலன் இனி பிழைக்க மாட்டார் என கருதிய செண்பகம் தங்களது காதல் மலர்ந்த இடமான ராமேசுவரத்திற்கு கடந்த 4-ந்தேதி தனியாக சென்று அங்கு விஷம் குடித்து மயங்கினார்.

இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராமேசுவரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரது அடையாள அட்டை மூலம் அடையாளம் காணப்பட்டு செண்பகத்தின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர்கள் அவரை திருச்சிக்கு அழைத்து வந்து, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயதேவன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story