கரூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் பஸ்கள் வழக்கம்போல் ஓடின


கரூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் பஸ்கள் வழக்கம்போல் ஓடின
x
தினத்தந்தி 8 Jan 2019 11:00 PM GMT (Updated: 8 Jan 2019 8:31 PM GMT)

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது.

கரூர்,

விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் ரெயில்வே, காப்பீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுத்துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகளை ரத்து செய்ய வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8 மற்றும் 9-ந்தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். மேலும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு தேசிய அளவிலான தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர். இதே போல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், டாஸ்மாக் பணியாளர் சங்கம், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கம் உள்ளிட்ட மாநில சங்கங்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்தன.

அந்த வகையில் நேற்று அகில இந்திய அளவிலான தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி கரூர் மண்டலத்துக்கு உட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை உள்ளிட்ட பணிமனைகளில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் மட்டுமே பணிக்கு வரவில்லை. இதனால் வழக்கம்போல் காலை முதலே அரசு பஸ்களின் போக்குவரத்து சேவை நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் வழக்கம் போல் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சிரமமின்றி செல்ல முடிந்தது.

இந்தநிலையில் கரூர் மாவட்டத்தில் பஸ்கள் எவ்வித தடையின்றி இயக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் திருமாநிலையூரில் உள்ள அரசு போக்குவரத்துப் பணிமனை மற்றும் கரூர் பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் அன்பழகன், போக்குவரத்துறை அதிகாரிகளுடன் நேற்று காலை சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு கரூர் மாவட்ட போக்குவரத்து கழக பணிமனைகள் மற்றும் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கரூர் நகருக்குள் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ, ஷேர் ஆட்டோ டிரைவர்கள் சிலர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற போதிலும், கரூர் பஸ் நிலையம், பழைய பைபாஸ் ரோடு, ஜவகர் பஜார், சர்ச் கார்னர், வெங்கமேடு உள்ளிட்ட இடங்களில் அவை வழக்கம் போல் இயங்கின.

மத்திய-மாநில அரசு ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் கரூரில் வழக்கம் போல் பஸ்கள் இயங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை. சில ஆசிரியர்கள் மட்டுமே போராட்டத்திற்கு சென்றதால் பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் இல்லை. கரூர் அரசு கலைக் கல்லூரியில் மட்டும் பேராசிரியர்கள் பேட்ஜ் அணிந்து கொண்டு பணியாற்றினர்.

கரூர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 80 சதவிதத்தினர் பணிக்கு செல்லவில்லை. அவர்களையும் சேர்த்து கரூரில் 600-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். மேலும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், மின்சார பயன்பாடு அளவை கணக்கீடு செய்தல், பழுதடைந்த மின்கம்பம்-மின்மாற்றியை சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டதால் மின்நுகர்வோர்கள் அவதிக்குள்ளாகினர்.

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டுக்குழுவின் கரூர் கிளை சார்பில் கரூர்-கோவை ரோட்டிலுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தலைவர் பெரியசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது, மின்சார துறையை தனியார்மயமாக்ககூடாது, காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி வருடாந்திர போனஸ் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதே போல், ஒப்பந்த, தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணியை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், எல்.ஐ.சி., பி.எஸ்.என்.எல். ஆகியவற்றில் பணியாற்றும் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத் தால் கரூர் கலெக்டர் அலுவல கம் தாலுகா அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகம் உள்ளிட்ட அரக அலுவலகங் கள் வெறிச்சோடி காணப் பட்டன.

இதேபோல் கரூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொ.மு.ச. மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை தாங்கினார். அப்போது, விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகேசன், ஐ.என்.டி.யு.சி. மாநில செயலாளர் அம்பலவாணன் உள்பட தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (புதன் கிழமை) 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதோடு மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story