தொழிற்சங்கங்களின் போராட்டம்: கேரளா செல்லும் பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம் பயணிகள் அவதி


தொழிற்சங்கங்களின் போராட்டம்: கேரளா செல்லும் பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 8 Jan 2019 10:45 PM GMT (Updated: 8 Jan 2019 10:20 PM GMT)

தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கேரளா செல்லும் பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

களியக்காவிளை,

நாடு முழுவதும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் சி.ஐ.டி.யூ. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. இருப்பினும் பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள ராணித்தோட்டம், கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், திருவட்டார் உள்பட 12 அரசு பணிமனைகளில் இருந்தும் நேற்று காலை பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. மேலும், அனைத்து பணிமனைகளுக்கு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து கிராமங்களுக்கும் மற்றும் மதுரை, நெல்லை போன்ற வெளி மாவட்டங்களுக்கும் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. ஆனால் கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டது.

இதே போல் கேரளாவில் இருந்தும் பஸ்கள் குமரி மாவட்டத்துக்கு இயக்கப்படவில்லை. இதனால், கேரளாவுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். அதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் ரெயில் நிலையத்தை நோக்கி படையெடுத்தனர். இதனால், கேரளா செல்லும் ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. 

Next Story