2-வது நாளாக வேலைநிறுத்தம்: தர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


2-வது நாளாக வேலைநிறுத்தம்: தர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2019 11:00 PM GMT (Updated: 9 Jan 2019 5:29 PM GMT)

அரசு ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற 2-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி தர்மபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆயுள் காப்பீட்டு கழகம், வங்கிகள், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் 2-வது நாளாக நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்திலும் வேலைநிறுத்தம் நடைபெற்றது.

இதனால் வங்கிகள், காப்பீட்டு அலுவலகங்கள், தொலைபேசி நிலையங்கள் வெறிச்சோடின. இந்த அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் இயங்கின. பெரும்பாலான வங்கிகளில் வழக்கமான பணிகள் நடக்காததால் பணபரிவர்த்தனை, காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட இணை செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்புகுழு தலைவர் சுருளிநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைதலைவர் தமிழ்செல்வி, மாவட்டசெயலாளர் சேகர், பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணைதலைவர் யோகராசு, தமிழ்நாடு நில அளவை அலுவலர் சங்க மாநில துணைதலைவர் அண்ணாகுபேரன், மகளிர் துணைக்குழு அமைப்பாளர் இளவேனில், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டதலைவர் பழனியம்மாள், சத்துணவு ஊழியர்சங்க மாவட்டதலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் சங்கர், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர்,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டசெயலாளர் சவுந்தரம்,பொது காப்பீட்டு ஊழியர்சங்க தலைவர் சக்கரவர்த்தி, கிளைசெயலாளர் மகேந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள்.

Next Story