நாகூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி ஒருவர் படுகாயம்


நாகூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Jan 2019 11:15 PM GMT (Updated: 9 Jan 2019 7:01 PM GMT)

நாகூர் அருகே கார், மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

நாகூர்,

திருவாரூர் மாவட்டம் மணக்கால் சின்ன தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(வயது 30). டிரைவர். இவர் தனது நண்பர் சூரியமூர்த்தியின் குடும்பத்தாருடன் திருத்துறைப்பூண்டியில் பெண் பார்த்து விட்டு திருவாரூரை நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வாஞ்சூரில் இருந்து நாகையை நோக்கி சிக்கல் குற்றம் பொருத்தான் இருப்பை சேர்ந்த பிரித்திவிராஜ்(28), அதே பகுதியை சேர்ந்த பரிதி இளம்வழுதி(25), சந்திரசேகர் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். நாகூரை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே 3 பேர் வந்த மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.

இந்த விபத்தில் பிரித்திவிராஜ், பரிதி இளம்வழுதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சந்திரசேகரன் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார், விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சந்திரசேகரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் காரை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவர் ஜெயச்சந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story