வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் 12 பெண்கள் உள்பட 85 பேர் கைது


வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் 12 பெண்கள் உள்பட 85 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 11:00 PM GMT (Updated: 9 Jan 2019 7:34 PM GMT)

வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 12 பெண்கள் உள்பட 85 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

மத்திய அரசு ஊழியர்கள் 2 நாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்திலும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக அவர்கள் நேற்று முன்தினம் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 2-வது நாள் தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சேவியர், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை பொதுச்செயலாளர் துரை.மதிவாணன், ஐ.என்.டி.யூ.சி. மோகன்ராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யூ. ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

போராட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் தொடங்கிவைத்தார். இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன், நிர்வாகிகள் மாலதி உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும். ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும்.

மத்திய, மாநில பொதுத்துறைகளை பாதுகாக்க வேண்டும். போனஸ், பி.எப். உச்சவரம்பை நீக்க வேண்டும். பணிக்கொடை தொகையை அதிகப்படுத்த வேண்டும். பொதுத்துறையிலும், சில்லறை வணிகத்திலும் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை கைவிட வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 85 பேர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டத்தையொட்டி தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Next Story