பொதட்டூர்பேட்டை அருகே ஆட்டோ மோதி பெண் பலி; தந்தையின் சாவு நிகழ்ச்சிக்கு சென்ற போது பரிதாபம்


பொதட்டூர்பேட்டை அருகே ஆட்டோ மோதி பெண் பலி; தந்தையின் சாவு நிகழ்ச்சிக்கு சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 9 Jan 2019 10:15 PM GMT (Updated: 9 Jan 2019 8:29 PM GMT)

தந்தையின் சாவு நிகழ்ச்சிக்கு சென்ற பெண் ஆட்டோ மோதி பலியானார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஜங்காளபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 60). நாடக கலைஞர். இவரது மனைவி தனலட்சுமி (46). இவர்களுக்கு ஜானகிராமன் (29) என்ற மகனும், நிரஞ்ஜனி (19) என்ற மகளும் உள்ளனர்.

தனலட்சுமியின் தந்தை சுப்பிரமணி வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா மேல்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தார். இவர் உடல்நலக்குறைவால் இறந்து போனதாக நேற்று காலை தனலட்சுமிக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனலட்சுமி தனது தந்தையின் சாவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பொதட்டூர்பேட்டை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ தனலட்சுமி மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் ஜானகிராமன் பெச்ாட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரான சதீஷ் (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story