வியாசர்பாடியில் மின்சார ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை; காதலன் கண் எதிரே பரிதாபம்


வியாசர்பாடியில் மின்சார ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை; காதலன் கண் எதிரே பரிதாபம்
x
தினத்தந்தி 9 Jan 2019 10:45 PM GMT (Updated: 9 Jan 2019 8:29 PM GMT)

வியாசர்பாடி ரெயில் நிலையத்தில், காதலன் கண் எதிரேயே மின்சார ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது காதலனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி காலனியை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகள் காமேஸ்வரி (வயது 19). இவர், கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

காமேஸ்வரி, தன்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்த வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற சுந்தர் (19) என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

பள்ளியில் படிக்கும்போது தொடங்கிய இந்த காதல், காமேஸ்வரி கல்லூரிக்கு சென்ற பிறகும் தொடர்ந்தது. இதையறிந்த அவரது பெற்றோர், காமேஸ்வரியை கல்லூரி அனுப்பாமல் பாதியில் நிறுத்திவிட்டு, வேலைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

ஆனாலும் இருவரும் காதலை தொடர்ந்து வந்தனர். இதை அறிந்த காமேஸ்வரியின் பெற்றோர் சுந்தரை கண்டித்தனர். நேற்று காதலர்கள் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் சென்னை கடற்கரைக்கு செல்வதற்காக வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்து நின்றனர்.

அப்போது இருவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த காமேஸ்வரி, திடீரென அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி வந்த மின்சார ரெயில் முன் பாய்ந்தார். இதில் காதலன் கண் எதிரேயே அவர் தலை துண்டாகி பரிதாபமாக இறந்தார். இதை கண்ட ரெயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பெரம்பூர் ரெயில்வே போலீசார், தற்கொலை செய்து கொண்ட காமேஸ்வரியின் உடல் மற்றும் துண்டாகி கிடந்த தலை ஆகியவற்றை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது காதலன் சுந்தரிடம் விசாரித்து வருகின்றனர். காதலனுடன் ஏற்பட்ட வாய்த்தகராறில் மனமுடைந்து காமேஸ்வரி, தானாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா?. அல்லது அவரை சுந்தர் கோபத்தில் ரெயிலில் தள்ளி விட்டு கொலை செய்தாரா? என்ற கோணத்தில் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story