விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 66 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்; போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தகவல்


விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 66 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்; போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தகவல்
x
தினத்தந்தி 9 Jan 2019 10:45 PM GMT (Updated: 9 Jan 2019 10:34 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 64 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்,

கடந்த ஆண்டு போலீசாரின் செயல்பாடுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு போலீசாரின் செயல்பாட்டால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 58 கொலை வழக்குகள் பதிவு செய்து 145 பேர் கைது செய்யப்பட்டனர். 8 வழக்குகளில் கொலையாளிகள் தற்கொலை செய்து கொண்டனர். 53 கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 46 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 37 வழக்குகளில் துப்பு துலக்கப்பட்டு 72 சதவீத பொருட்கள் மீட்கப்பட்டன.

105 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 1¾ கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டது. கடந்த ஆண்டு 205 வாகன விபத்துகள் பதிவு செய்யப்பட்டதில் 238 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2017–ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு வாகன விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 28 சதவீதம் குறைந்துள்ளது. மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக 219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 212 பேர் கைது செய்யப்பட்டதுடன் 245 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலன்காக்கும் வகையில் போதை பொருட்கள் விற்றதாக 1081 வழக்குகளும் கஞ்சா விற்றதாக 74 வழக்குகளுக் சட்டவிரோதமாக மது விற்றதாக 1503 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு 13 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 64 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சமூக நலத்துறை மூலம் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு போலீசாரின் செயல்பாட்டினால் குற்றச்செயல்கள் வெகுவாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


Next Story