அவினாசி, ஊத்துக்குளியில் தொழிற்சங்கத்தினர் சாலைமறியல்


அவினாசி, ஊத்துக்குளியில் தொழிற்சங்கத்தினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 9 Jan 2019 11:54 PM GMT (Updated: 9 Jan 2019 11:54 PM GMT)

அவினாசி, ஊத்துக்குளியில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவினாசி,

குறைந்தபட்ச ஊதிய உச்சவரம்பை உயர்த்த வேண்டும், பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது, தொழிலாளர்கள் நலச்சட்ட சீர்திருத்த முயற்சியை கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 தொழிற்சங்கங்கள் கடந்த 8 மற்றும் 9-ந் தேதிகளில் நாடுமுழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தன. அதன்படி நேற்று முன்தினம் பெரும்பாலான அரசு அலுவலர்கள் வேலைக்கு செல்லவில்லை. வங்கி ஊழியர்கள் வேலைக்கு போகாததால் வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. பண பரிவர்த்தனையையும் முடங்கியது.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அவினாசி புதிய பஸ் நிலையம் அருகே சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் முத்துசாமி (சி.ஐ.டி.யு.), இசாக் (ஏ.ஐ.டி.யு.சி.), பாண்டியன் (எம்.எல்.எப்), தனலட்சுமி (சத்துணவு ஊழியர்சங்கம்) மற்றும் வெங்கடாச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 59 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அனைவரையும் அங்குள்ள திருமண மண்டபத்தில் போலீசார் தங்கவைத்தனர்.

ஊத்துக்குளி

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று பொது வேலைநிறுத்தத்தையொட்டி சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எல்.பி.எப், ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தின் ஊத்துக்குளி தாலுகா சார்பாக பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியலில் எல்.பி.எப் ஊத்துக்குளி தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார்.

சி.ஐ.டி.யு மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி, ஏ.ஐ.டி.யு.சி சின்னச்சாமி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குமார்,சி.ஐ.டி.யு மாவட்ட துணைச்செயலாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் ஈடுபட்ட 91 பெண்கள் உள்பட 191 பேரை ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்தனர்.


Next Story