தோல்வி பயத்தால் தான் உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு நடத்தவில்லை மு.க.ஸ்டாலின் பேச்சு


தோல்வி பயத்தால் தான் உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு நடத்தவில்லை மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 10 Jan 2019 11:15 PM GMT (Updated: 10 Jan 2019 6:49 PM GMT)

தோல்வி பயத்தால் தான் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என்று தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் சீகம்பட்டி, மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு ஆகிய இடங்களில் நேற்று காலை ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. சீகம்பட்டி சின்ன மாரியம்மன் கோவில் திடலில் புளியமரத்தடியிலும், நவலூர் குட்டப்பட்டில் கிறிஸ்தவ ஆலயம் அருகிலும் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தரையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்த ஆட்சியில் தமிழ்நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. நான் 50 வருடமாக பொது வாழ்வில் இருந்து வருகிறேன். காமராஜர் முதல் எல்லா முதல்-அமைச்சர்களையும் பார்த்து இருக்கிறேன். எனது அரசியல் வாழ்வில் எடப்பாடி பழனிசாமியை போல் ஒரு முதல்-அமைச்சரை பார்த்ததில்லை. ஜெயலலிதா ஒரு மாஸ் லீடராக, பெண்ணாக இருந்ததால் ஏதோ ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சியிலும் தவறுகள் நடந்தன. அதற்காக தான் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலா சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். இறந்து விட்ட ஜெயலலிதா பற்றி நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

ஆனால் அவரது பெயரை சொல்லி ஆட்சி நடத்தி வருபவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். ஜெயலலிதா இறப்பு பற்றி இப்போது அவர்களுக்குள்ளே குழப்பம் வந்து விட்டது. சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என கூறி இருக்கிறார். ஜெயலலிதா இறப்பு பற்றி ஆறுமுகசாமி ஆணையம் நடத்தும் விசாரணை ஒரு நாடகம் என்பது இதன் மூலம் தெரிந்து விட்டது.வயது முதிர்வின் காரணமாக கருணாநிதி இறந்த பிறகு தி.மு.க. சார்பில் பல இரங்கல் கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். அந்த கூட்டங்களில் பல மாநில முதல்வர்கள், அகில இந்திய தலைவர்கள் எல்லாம் வந்து பேசிவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா இறந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அவருக்கு இதுவரை ஒரு இரங்கல் கூட்டம் நடத்தக்கூட அவர்களுக்கு யோக்கியதை இல்லை. இது தான் இந்த ஆட்சியின் லட்சணம்.

நாடாளுமன்றத்துக்கு இன்னும் சில மாதங்களில் வரப்போகும் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் வந்தால் தான் உருப்படும் என தமிழக மக்கள் நினைக்கிறார்கள். 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அதற்கு முன்னதாக வரலாம். இங்கு பேசியவர்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாதது பற்றி குறிப்பிட்டார்கள். இதற்கு காரணம் என்ன? உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதது தான். உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தி.மு.க. வெற்றி பெற்று விடும் என்ற தோல்வி பயத்தினால் தான் ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகும் திட்டமிட்டே பொய்யான காரணங்களை கூறி தள்ளி வைத்து வருகிறார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் பற்றிய அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்.

நான் முதல்-அமைச்சராக இருந்தால் மகளிர் சுயஉதவி குழுக்களை எனது கையில் தான் வைத்து இருப்பேன். தி.மு.க. ஆட்சியின்போது கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தை அவரது உடலில் செலுத்திய கொடுமை நடந்து உள்ளது.

ஆனால் இதைப்பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள கேடு கெட்ட ஆட்சிகளை அகற்றுவதற்கான மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். ஒரே நேரத்தில் 2 ஆட்சிகளையும் அகற்ற இந்த ஊராட்சி சபை கூட்டங்கள் பயன்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story