நெல்லை சந்திப்பில் ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


நெல்லை சந்திப்பில் ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 10 Jan 2019 11:00 PM GMT (Updated: 10 Jan 2019 6:52 PM GMT)

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

நெல்லை, 

தெற்கு ரெயில்வே தலைமை பாதுகாப்பு அதிகாரி மேத்தா, தலைமை போக்குவரத்து திட்ட அதிகாரி செந்தில்குமார் மற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், ரெயில்கள் பாதுகாப்பாக இயக்கப்படுகிறதா? தண்டவாளம் முறையாக பராமரிக்கப்படுகிறதா? சிக்னல் ஆகியவை சரியாக செயல்படுகிறதா? என்று தீவிர ஆய்வு செய்தனர்.

மேலும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள், புதிய வசதிகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வின்போது மதுரை ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் லலித்குமார், நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அம்பை, தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ரெயில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரெயில்களை விபத்து இன்றி ஓட்டுவதற்கு உரிய நடைமுறைகளை தெரிவிக்கவும், அவை சரியாக பின்பற்றப்படுகிறதா? என்று ஆண்டுக்கு ஒருமுறை ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்யப்படும். இதுதவிர 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிற ரெயில்வே மண்டலங்களை சேர்ந்த அதிகாரிகள் வெவ்வேறு மண்டலங்களில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்வார்கள். இந்த அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது” என்றனர்.

Next Story