தசைச்சிதைவு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி


தசைச்சிதைவு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி
x
தினத்தந்தி 10 Jan 2019 11:00 PM GMT (Updated: 10 Jan 2019 7:11 PM GMT)

தசைச்சிதைவு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி பெறுவதற்கு விண்ணப்பிக்க வருகிற 21-ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேனி,

தேனி மாவட்டத்தில் தசைச்சிதைவு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் தசைச்சிதைவு, பக்கவாதத்தால் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டு இரு கால்களும், இரு கைகளும் செயலிழந்த கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள், பணிபுரிபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ஒதுக்கீடு செய்யப்படும் சிறப்பு சக்கர நாற்காலிகளில் மத்திய, மாநில அரசுகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், மூத்த குடிமக்களான 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 55 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு தேவையின் அடிப்படையில் வழங்கப்படும்.

எனவே இத்திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, கல்வி பயிலும் அல்லது பணி புரியும் அல்லது சுயதொழில் புரிவதற்கான சான்று, 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 21-ந்தேதி கடைசி நாள் ஆகும். எனவே, தகுதியின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story